பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடி செல்ல வேண்டிய வழிபாட்டுதலம், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகிலுள்ள கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயிலாகும். இங்கு தான் கடுவெளிச்சித்தர் சிவதரிசனம் பெற்றார்.
தல வரலாறு: கடுவெளிச்சித்தரின் அவதாரத்தலம் இது. கடுவெளி என்றால் பரந்தவெளி என்று பொருள். சித்தர், தான் கண்டுணர்ந்த ஞானத்தை தான் மட்டுமின்றி, மக்களும் உணர்ந்து கொண்டு உலகமே சிறப்பாக இருக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் மக்களுக்கு அதை உபதேசித்தார். இதனால், இவருக்கு கடுவெளிச்சித்தர் என்ற பெயர் ஏற்பட்டது. இங்கு தங்கியிருந்த சித்தர், சிவதரிசனம் வேண்டி தவமிருந்தார். அவருக்காக இத்தலத்தில் எழுந்தருளிய சிவன், சித்துக்கள் வல்லமை பெறும்படி அருள் செய்தார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சோழ மன்னன் ஒருவன், சித்தருக்கு அருளிய சிவனுக்கு கோயில் எழுப்பினான். இவர் பஞ்சபூதங்களில் ஆகாயத்திற்கு அதிபதியாக திகழ்வதால் ஆகாசபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார். தலமும் சித்தர் பெயரால் கடுவெளி என்றழைக்கப்பட்டது.
பூராடம் நட்சத்திர தலம்: சுவாமி ஆகாசபுரீஸ்வரர் இங்கு பூராடம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக அருளுகிறார். இங்குள்ள அம்பிகை, மங்களகரமான வாழ்க்கை தருபவள் என்பதால் மங்களாம்பிகை என்று பெயர். ஆகாச வெளியில் உள்ள அனைத்து தேவதைகளும், வாஸ்து பகவானும், பூராட நட்சத்திரநாளில் ஆகாசபுரீஸ்வரரை வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது நட்சத்திர நாளில் இத்தல சிவனுக்கு புனுகு, ஜவ்வாது சாத்தி, மாலை அணிவித்து, கேசரி நைவேத்யம் செய்து வணங்கினால் வாழ்வு சிறக்கும். திருமணத்தடை உள்ளவர்கள் தங்கள் நட்சத்திர நாளில் சுவாமி சன்னதியில் சாம்பிராணி புகையிட்டு வழிபடுகின்றனர்.
சித்தர் வழிபாடு: முதலில் இக்கோயிலில் கடுவெளிச்சித்தரின் சிலை வடிவம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன், இக்கோயிலைத் திருப்பணி செய்தபோது, கடுவெளிச்சித்தரின் சிலை கிடைக்கப்பெற்றது. இவர் கோயில் முன் மண்டபத்தில் இருக்கிறார். சித்தருக்கு சிவன் காட்சி தந்தபோது, அவருக்காக நந்திதேவர் வெளியே நின்று கொண்டாராம். இதனடிப்படையில் நந்தி, கோபுரத்திற்கு வெளியே உள்ளது. சித்தர் வழிபாட்டில் ஈடுபாடு உள்ளோர் வழிபட வேண்டிய தலம் இது.
திருவிழா: ஐப்பசியில் அன்னாபிஷேகம், தைப்பூசம், சிவராத்திரி, நவராத்திரி, பங்குனி உத்திரம்.
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரத்தில் கடுவெளி உள்ளது. பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.
திறக்கும் நேரம்: காலை 9 10 மணி, மாலை 5 6 மணி. பூராடம் நாட்களில் காலை 8 1 மணி வரை. மற்ற நேரத்தில் அர்ச்சகரை அழைத்து வந்து தரிசனம் செய்யலாம்.
போன்: 94434 47826, 96267 65472.
|